இதுகுறித்து புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அவசரகதியில் அமல்படுத்தியதன் விளைவாக, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தோல்வியடைந்துள்ளனர். இந்த தோல்வி, புதுச்சேரி அரசின் கல்விக் கொள்கையின் தோல்வியை தெளிவாக உணர்த்துகிறது. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக, அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இந்த முடிவு, அரசின் கவனக்குறைவையும், திட்டமிடப்படாத அணுகுமுறையையும் பறைசாற்றுகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன், ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சியோ, மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதலோ வழங்கப்படவில்லை. இதன் விளைவாக, மாணவர்கள் கடுமையான உளவியல் மற்றும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த அவலநிலைக்கு புதுச்சேரி அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என வன்மையாக கண்டிக்கிறேன்.
புதுச்சேரி சிபிஎஸ்இ படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள், தங்கள் விடைத்தாள்களின் நகல் பெறுவதற்கு ஒரு பாடத்திற்கு ரூ.500/- செலுத்த வேண்டியுள்ளது, மேலும் ஒரு கேள்விக்கு மறுமதிப்பீடு செய்ய ரூ.100/- செலவாகிறது. இதுவே, தமிழ்நாடு மாநில சமச்சீர் பாடத்திட்டத்தில் விடைத்தாள் நகல் பெறுவதற்கு செலவாகும் தொகை வெறும் ரூ.275/- இதனுடன் ஒப்பிடுகையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நகலை பெறுவதற்கு இரு மடங்கு செலவாகிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பல அரசு பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு இந்தக் கட்டணங்கள் , மாத இறுதிக்கட்டதிலும் கல்வியாண்டின் துவக்கத்திலும் கடுமையான நிதிச்சுமையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது. விடைத்தாள்கள் முறையாக திருத்தப்பட்டனவா என்பதை அறியவே இத்தகைய செலவுகளை மாணவர்கள் சுமக்க வேண்டியிருப்பது அநீதியாகும். இந்த பொருளாதார பாதிப்பு, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்து, அவர்களின் உளவியல் நலனையும் பாதிக்கிறது. இத்தகைய நடைமுறைகளை அரசு உடனடியாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் காரணமாக ஏற்பட்ட தோல்விகள், மாணவர்களிடையே கல்வி இடைநிற்றலை அதிகரிக்கும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளன. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள், தோல்வியின் உளவியல் தாக்கத்தையும், மறுதேர்வு மற்றும் மறுமதிப்பீட்டிற்கான செலவுகளையும் தாங்க முடியாமல், கல்வியை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது, சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக அமைகிறது. அரசு பள்ளி மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் இத்தகைய குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோல்வியுற்ற புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டுதல் இல்லாமை வருத்தமளிக்கிறது. தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டும் பயிற்சிகளோ, மறுதேர்விற்கு உரிய வழிகாட்டுதலோ முறையாக வழங்கப்படவில்லை. அரசு பள்ளி மாணவர்கள், பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இத்தகைய ஆதரவு அவர்களுக்கு மிகவும் அவசியமாகும். ஆனால், புதுச்சேரி அரசு இதில் முழுமையாக தோல்வியடைந்துள்ளது. மாணவர்களின் தோல்விக்கு பாடத்திட்ட மாற்றமும், ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சி இல்லாமையும் முக்கிய காரணங்களாக உள்ளன. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் மறுதேர்வு செலவுகளால் மேலும் பாதிக்கப்படுகின்றனர். இதனை மறைக்காமல் மறுக்காமல் மறுதேர்விற்கும் மறுகூட்டலுக்கும் தேவையான பொருளாதார உதவிகளை புதுச்சேரி அரசு தாமாகவே முன் வந்து முழு செலவுகளையும் செய்ய வேண்டும்.
புதுச்சேரி ஆட்சியாளர்களின் தவறான கல்விக் கொள்கைகள் மற்றும் அணுமுறைகளால் நமது இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கக் கூடாது. அவசரமாக அமல்படுத்தப்பட்ட சிபிஎஸ்இ பாடத்திட்டம் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது என்பதை உணர்ந்து உடனடியாக தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும். இத்தகைய பல தோல்விகளுக்குப் பிறகு, அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து முழு வெளிப்படைத் தன்மையுடன் புதுச்சேரி மக்களுக்கு உரிய தகவல்களை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை எந்தவொரு தெளிவான அறிக்கையையும் கல்வித்துறை வெளியிடவில்லை. நமது இளைய தலைமுறையின் கல்வி உரிமையைப் பாதுகாக்க புதுச்சேரி அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.