புதுச்சேரி அரசு, மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தும் புதிய ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்டத்தில், ரூ. 5 லட்சம் வரை நிதியுதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 22,500 புதிய வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு வீடு கட்டும் திட்டமும், மத்திய அரசின் பிரதம மந்திரி நகர்புற வீடு திட்டம் 2.0 உடன் இணைத்து, புதுச்சேரி அரசு செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் வீடற்ற குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடுகளை கட்டிக்கொடுக்க அரசு உறுதி செய்துள்ளது.
நிதியுதவி விவரம்:
* மத்திய அரசு பங்கு – ரூ. 2.25 லட்சம்
* மாநில அரசு பங்கு – ரூ. 2.75 லட்சம்
* மொத்தமாக பயனாளிக்கு – ரூ. 5 லட்சம்
முதல் தவணையாக, அடித்தள கட்டுமானம் தொடங்கியதும் ரூ. 1 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டத்தில், சொந்த நிலம் உள்ளவர்கள், பொதுப் பிரிவு மற்றும் பிற பின்தங்கிய பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
முன்பு PMAY 1.0-ல் விண்ணப்பித்தும், மானியம் பெறாதவர்களும் இந்த புதிய திட்டத்தில் முன்னுரிமையுடன் சேர்க்கப்படலாம். இதுவரை 10,928 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன; மேலும் 3,241 வீடுகள் கட்டுமான நிலையில் உள்ளன.
விண்ணப்பிக்க வேண்டிய முறை:
பொதுமக்கள், விண்ணப்பங்களை புதுச்சேரி குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் பெறலாம். இணையதளங்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம்:
www.tcpd.py.gov.in
https://pmaymis.gov.in
இந்த புதிய திட்டத்திற்கான விண்ணப்பங்களை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் வெளியிட்டார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.
தகுதியுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். சொந்தமாக வீடு கட்டும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்.