புதுச்சேரி சபாநாயகரை ஒருமையில் விமர்சனம் செய்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேருவை, சபாநாயகர் உத்தரவுபடி சபை காவலர்கள் குண்டு கட்டாக பேரவையில் இருந்து வெளியேற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி சபாநாயகர் செல்வம் விதிகளை மீறி செயல்படுவதாக கூறி, அவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுதிமொழிக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் நேரு நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பாஸ்கர் என்கிற தட்சணாமூர்த்தி நியமனம் செய்யப்பட்டார். இது நேருவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் கூடுதல் செலவினங்கள் அனுமதிக்காக ஒரு நாள் கூட்டப்பட்ட சட்டபை கூட்டத்தில் உறுதி மொழி தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது குறித்து, சட்டமன்ற உறுப்பினர் நேரு சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டர். இதனை தொடர்ந்து, நேருவை ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டதொடரில் நேற்று மானியக்கோரிக்கைகள் மீது பேசிய நேரு, ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது சபாநாயகர் தலையிட்டு, ஒரு சட்டமன்ற உறுப்பினர் இவ்வளவு நேரம் பேசினால், மற்றவர்களுக்கு எப்போது வாய்ப்பளிப்பது எனக்கூறி மேலும் பேச அனுமதி மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த நேரு, தன் கையில் பேச வைத்திருந்த குறிப்பை கிழித்தெறிந்தார்.
இந்நிலையில் சபாநாயகர் பல்வேறு சட்டமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை மேலும் ஒரு ஆண்டு காலம் நீட்டித்து அனுமதி வழங்கினார் .
அப்போது குறிக்கிட்ட நேரு சட்டமன்ற உறுப்பினர் நேரு உறுதிமொழி குழு தலைவர் யார்? உறுப்பினர்கள் யார்?
என சபாநாயகரை பார்த்து கேட்டார். ஏற்கனவே உறுதிமொழி குழு தலைவர் பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி என்பதை தெரிவித்துவிட்டேன். இதற்கு மேலும் என்ன சந்தேகம் என கேட்டார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய சட்டமன்ற
நேரு: சபாநாயகர் தான் தோன்றித்தனமாக பேசுகிறார். சபாநாயகராக இருக்க தகுதியில்லை, நீங்கள் ஒரு அவமான சின்னம் எனக்கூறி, சபாநாயகரை ஒருமையில் பேசினார். இதை தொடர்ந்து ஒருமையில் பேசிய நேருவை, சபைக்காவலர்கள் அவையில் இருந்து வெளியேற்றவும், வெளியேற மறுத்தால் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றவும் சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டார். தொடர்ந்து சபைக்காவலர்கள் நேருவை வலுக்கட்டாயமாக அவையில் இருந்து வெளியேற்றினர். மேலும் சட்டமன்ற உறுப்பினர் என்பதை மறுந்து ஒழுங்கீனமாக செயல்பட்ட நேருவை இந்த கூட்டத்தொடர் முழுவது சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் சாய் சரவணன்குமார், தனது துறை மீதான மானிய கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது முதல்வர் ரங்கசாமி எழுந்து நேரு உணர்ச்சிவசப்பட்டு பேசக்கூடியவர். அதுபோன்ற ஒரு நிலையில் அவர் பேசியதை சபாநாயகர் மன்னித்து அவர் மீண்டும் அவை நிகழ்வுகளில் பங்கேற்க அழைப்பு விடுக்குமாறு சபாநாயகரை கேட்டுக்கொள்கிறேன் என்றாரர்.
அப்போது சபாநாயகர் செல்வம், ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து அவர் செயல்பட வேண்டும். முதல்வர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, நேருவை மீண்டும் அவை நிகழ்ச்சிகள் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுகிறேன். தொடர்ந்து நேரு அவை நிகழ்வுகளில் பங்கேற்று தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.