இந்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த திடக் கழிவு மேலாண்மை பணிகளை புதுச்சேரி உள்ளாட்சி துறை மேற்கொள்ள ஒப்பந்த புள்ளிகள் கோரியதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தொழில்திறனிலும் முன்னணி கிரீன் வாரியர் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, இந்த பணிகளை திறமையாக முன்னெடுத்து வருகிறது.
புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி பகுதிகளில் தினசரி சுமார் 400 டன் அளவில் சேகரிக்கப்படும் திடக் கழிவுகள் இதுவரை குரும்பாபேட்டையில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் குவிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேல் கிரீன் வாரியர் நிறுவனம் அந்தக் கழிவுகளை வகைப்படுத்தி, தரம் பிரித்து, அவற்றை சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வழங்கி வருகிறது. இதன் மூலம் கழிவுகளுக்கு இரண்டாம் வாழ்வு கொடுத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெரும் பங்களிப்பு செய்துள்ளது.
இப்பொழுது, புதுச்சேரியில் குரும்பாபேட்டையில் உள்ள குப்பை கிடங்களில் சேகரித்து வைக்கப்படும் கழிவுகளின் அளவு அதிகமாக குறைக்கப்பட்டு, சுற்றுச்சூழல் மற்றும் நகராட்சித் துறைகளுக்கு பெரும் உதவி கிடைத்துள்ளது.
மேலும், 01.06.2025 முதல் புதுச்சேரியில் முதன்முறையாக கிரீன் வாரியர் நிறுவனம் ஒருங்கிணைந்த திடக் கழிவு மேலாண்மை விதிகளின்படி வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக சேகரிக்கும் பணிகளை துவங்குகிறது. இது கழிவுகளை தரம் பிரித்து, மறுசுழற்சி மற்றும் முறையான சிதைக்கும் பணிகளை மேம்படுத்துவதற்கான முக்கிய படியாகும்.
இந்த சேகரிப்பு பணிக்கான தேவையை பூர்த்தி செய்வதற்காக, தெருக்களின் தன்மைக்கேற்ப பாட்டரியால் இயங்கும் வாகனங்கள், கனரக மற்றும் இலகு வகை வாகனங்கள், மேலும் சாலைகளை பராமரிக்க உதவும் வாகனங்கள் ஆகியவை கிரீன் வாரியர் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, மேட்டுப்பாளையத்தில் உள்ள டிரக்டர் டெர்மினல் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.
இவ்வாகனங்களுக்கு இன்று காலை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பூஜை செய்து, கொடியசைத்து சேவையை துவக்கி வைத்தார்.
இந்த விழாவில் புதுச்சேரி அமைச்சர் சாய் ஜெ. சரவணன்குமார், உள்ளாட்சி துறை இயக்குநர், பாண்டிச்சேரி மற்றும் உழவர்கரை ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, திட்ட முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்களை குறித்து விவாதித்தனர்.
அதனால், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை ‘மக்கும் குப்பை’ மற்றும் ‘மக்காத குப்பை’ எனத் தரம் பிரித்து, கிரீன் வாரியர் நிறுவனம் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஒப்படைத்து, புதுச்சேரியை தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பு துறையில் முன்னணி மாநிலமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்குமாறு உள்ளாட்சி துறை மனமுவந்து கோருகிறது.
இந்த திட்டம் முழுமையாக செயல்பட்டு, பொதுமக்களின் பங்கேற்பும், உள்ளாட்சி அமைப்புகளின் கண்காணிப்பும் இணைந்து செயல்படும் போது, புதுச்சேரி சுத்தமான, அழகான மற்றும் ஆரோக்கியமான நகரமாக மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.