புதுச்சேரியில் சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்: டி.ஐ.ஜி-யிடம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா மனு

புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா இன்று காவல்துறை துணை தலைவர் சந்தியசுந்தரம் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: – ஆன்மிகம், அமைதிக்கு பெயர் போன புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில தினங்களாக சட்டம்–ஒழுங்கை கேள்விக்குறியாக்கும் வகையில் கொலை சம்பவங்கள், பாலியல் துன்புறுத்தல், போக்குவரத்து சீர்கேட்டால் 40 நாட்களில் 26 பேர் உயிரிழப்பு, இளைஞர்கள், சிறார்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி அப்பாவிகள் மீது வெடிகுண்டு வீசும் சம்பவங்கள் அரங்கேறி புதுச்சேரி மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. சம்பவம் நடந்த பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும், குற்றச்சம்பவங்களை முன்கூட்டியே அறிந்து தடுக்க காவல்துறை தவறி விடுகிறது என்பதுதான் பெரும் குறையாக உள்ளது.

கடந்த ஆண்டு முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சுவடுகள் மறையும் முன்னே, புதுச்சேரி தவளக்குப்பம் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவி அதே பள்ளி ஆசிரியர் மணிகண்டன் என்பவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் புதுச்சேரி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தவளக்குப்பம் பகுதியே கலவர பூமியாக மாறி இன்னும் சகஜ நிலைக்கு திரும்பவில்லை. இருப்பினும் இந்த வழக்கு சாதாரண வழக்காக பார்ப்பதால் மக்களுக்கு இந்த வழக்கை மறு விசாரணை செய்ய கோருகின்றனர். இதுவரை வந்த பிரச்சனைகள் எல்லாம் மக்களால் இல்லை. குழந்தை பாதிப்பால் பெற்றோருக்கு ஆதரவாக இருந்தது. ஆனால் இன்று பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று படிக்கும் பிள்ளைகள் நடுரோட்டில் உட்கார்ந்து இந்த பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார்கள். காவல்துறை எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் நடுநிலையோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியும், பாதுகாப்பும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

ஏற்கனவே புதுச்சேரி மக்கள் காவல்துறை மீது நம்பிக்கை இழந்துள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்பவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை மாற்றி மேல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விசாரணையில் தாங்கள் நேரடியாக களத்தில் இறங்கி இந்த சம்பவத்தில் யார் யாரெல்லாம் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் இது போன்ற குற்றச்செயல்களில் இனி யாரும் ஈடுபடுவதற்கு அஞ்சும் வகையில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை காலத்தோடு பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். அதனடிப்படையில், காவல்துறை பாரபட்சமின்றி சட்டரீதியாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது, சட்டமன்ற உறுப்பினர் சம்பத், திமுக தொகுதி செயலாளர் நடராஜன், மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் நவீன் ஆகியோர் உடனிருந்தனர்.