தமிழகத்தை போல சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும்: எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்

புதுச்சேரி பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் எதிர்கட்சி தலைவர் சிவா பேசுகையில், கடந்த பட்ஜெட்டில் வரி இல்லை என கூறிவிட்டு மின்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வரி விதிக்கப்பட்டுள்ளது. வருவாயை பெருக்க அரசு எந்த வழியையும் செய்யவில்லை. ரெஸ்டோபாரில் எந்த வருமானமும் இல்லை. புதுவையில் கடந்த 10 ஆண்டுகளில் பல பிரெஞ்சுக்காரர்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் ஒத்துழைத்துள்ளனர். பொதுப்பணித்துறையில் விரயம் தான் அதிகமாக உள்ளது. மின்துறை தனியார் மயமாகுமா? ஆகாதா? என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பட்ஜெட்டில் இதை வெளிப்படையாகவே கூறியிருக்கலாம். மூடப்பட்ட பஞ்சாலைகள் குறித்து ஒவ்வொரு பட்ஜெட்டிலுமு் ஒரு விஷயம் கூறுகிறார்கள், ஜவுளி பூங்கா கொண்டு வரப்படும் என கூறிவிட்டு, தற்போது ஏக்தாமால் கொண்டு வரப்படும் என கூறுகிறீர்கள். முதலில் திட்டங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்.

புதுவையில் தொழிற்சாலைகள் வர வேண்டும் என நினைத்தால் தனி கவனம் செலுத்த வேண்டும். அதிக பட்ஜெட் போட்ட முதல்வரான உங்களால் புதுவையில் ஒரு தொழிற்பேட்டையை கூட கொண்டு வர முடியவில்லை. தொழிற்சாலைகள் மட்டுமே மாநிலத்திற்கு வருவாயை கொடுக்கும். சுற்றுலா வளர்ச்சியில் மணப்பட்டை தவிர வேறு எதையும் கூறுவதில்லை. அறிவித்த சுற்றுலா திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போதுள்ள சுற்றுலாக்கள் அனைத்தும் நிரந்தர சுற்றுலா இல்லை. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒரு முறை வந்தால் மறு முறை வருவதில்லை. இதற்கு நகரத்தின் நெரிசலை குறைக்க வேண்டும். காரைக்கால் துறைமுகத்தை நம்மிடமே கொடுத்துவிடுமாறு மத்திய அரசிடம் கேளுங்கள். புதுவை துறைமுகத்தில் இதுவரை கப்பல் வரவில்லை. லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலையை மட்டுமாவது திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்ஜெட்டில் அறிவித்ததை பெயரளவிலாவது செய்யுங்கள். வில்லியனூரில் வேளாண்மை மண்டலமாக அமைக்கப்படும் என அறிவித்துள்ளீர்கள். சித்த மருத்துவ கல்லூரி வில்லியனூரில் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு அறிவித்துள்ளீர்கள். புதுவையில் சட்டப்பல்கலைக்கழகம் வருமா? வராதா? அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் வழங்கப்படுமா? ஏற்கனவே அறிவித்த பட்ஜெட்டுகளில ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் அறிவித்திருந்தீர்கள், அதனை மறந்துவிட்டு தற்போது ரூ. 2 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மடுகரையில் கொண்டு வருவதாக கூறிய மாடல் கல்லூரி என்ன ஆனது? புதுவையில் விளையாட்டு மைதானங்கள் கொண்டு வருவதாக கூறியது கிடப்பில் போடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் மைதானங்கள் இல்லாததால் விளையாட்டு வீரர்கள் சிரமம் அடைகிறார்கள். மருந்து பதப்படுத்தும் தொழிற்சாலை இதுவரை வரவில்லை. பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்குவதாக கூறியது, காமராஜர் காப்பீட்டு திட்டம் என்ன ஆனது? கடந்த பட்ஜெட்டில் கூறியதை தற்போது நினைவூட்டுகிறேன். மகளிர் ஆணைய உறுப்பினர்கள் பாகூர் தொகுதியிலேயே 3 பேர் தேர்வாகி இருக்கிறார்கள். இது ஏன்? பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டத்தை மறந்துவிட்டீர்கள். உயர்நீதிமன்றத்தில் உள்ள அரசு வழக்கறிஞர் அரசுக்காக வாதாடுவதில்லை, மாணவர்களுக்கான முட்டை வழங்குவது, மகளிருக்கான உதவித்தொகை திட்டம், மாலை சிற்றுண்டி திட்டம், திறன்மேம்பாட்டு திட்டம், கல்வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழகத்தை பின்பற்றி செய்கிறீர்கள், தமிழகத்தை போல சிபிஎஸ்இ பாடத்திட்டத்தையும் எடுத்துவிட்டால் நன்றாக இருக்கும்.

ரயில், துறைமுகம் ஆகியவை நம் கையில் இருந்தால் வளர்ச்சி இருக்கும். முதல்வரின் பட்ஜெட் மாநில வளர்ச்சியை விட தேர்தலை கருத்தில் கொண்டு மக்களை மகிழ்விக்க அறிவித்த பட்ஜெட். இதனை புதுவை மக்களுக்கு செய்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.