பிஆர்டிசி ஊழியர்கள் போராட்டம் வாபஸ்… நாளை (11.04.2026) முதல் புதுச்சேரி அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்.!

புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகம் சார்பில் உள்ளூர் மற்றும் சென்னை, பெங்களூரு, குமுளி, நாகர்கோவில் உள்ளிட்ட வெளியூர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சாலை போக்குவரத்து கழகத்தில் 265 ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பலகட்ட போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த இரண்டு நாட்களாக ஒப்பந்த ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தபா போராட்டத்தில்‌ ஈடுபட்டு வந்தனர். ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்த ஊழியர்களும் ஆதரவு தெரிவித்ததால் இரண்டு நாட்களாக புதுச்சேரி அரசு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று சாலை போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்‌ சிவக்குமார் போராட்டகாரர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், ஒரு மாதத்தில் பணி நிரந்தரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர்‌. இதனையடுத்து நாளை முதல் வழக்கம் போல்‌ புதுச்சேரி அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.