மூன்று நாள் அரசுமுறை பயணமாக குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் இன்று புதுச்சேரி வந்துள்ளார். புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள துணை ஜனாதிபதி, நாளை திங்கட்கிழமை (16.06.2025) மாலை 4 மணி அளவில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அவர் சொல்லும்போது சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படும், அந்நேரத்தில் பள்ளிகள் விடப்பட்டால் மாணவர்கள் வீட்டுக்கு செல்லும்போது சிரமப்படுவார்கள் என்பதாலும், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பள்ளிகளை ஜீன் 16-ஆம் தேதி திங்கட்கிழமை 2 மணிக்குள் முடிக்குமாறு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-, புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும், ஜூன் 16-ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளி மாணவர்களை பிற்பகல் 2:00 மணிக்குள் விடுவிக்க வேண்டும்.
மேலும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தேவையான ஏற்பாடுகளை முன்னதாக செய்து, பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு தகவல் வழங்க வேண்டும் என்றும், அரசால் வழங்கப்படும் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தும் மாணவர்களை, புதிய நேரத்துக்கு ஏற்ப அழைத்துச் செல்ல போக்குவரத்து கண்காணிப்பு குழு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.