புதுச்சேரியில் பள்ளிகள் இயங்கும் நேரம் மாற்றியமைப்பு: 7ம் தேதி முதல் அமலாகிறது

புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் தினசரி பாடவேளை 7ல் இருந்து 8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 15 ம் தேதி முதல் பள்ளிகள் இயங்கும் நேரம் மாற்றப்பட்டது. அதன்படி, தினமும் 8 பாடவேளைகளுடன் காலை 9 மணிக்கு காலை வழிபாட்டுடன் பள்ளிகள் துவங்கி மாலை 4.20 மணி வரை நடைபெற்றன. இதற்கிடையே ஆசிரியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் பள்ளிகள் இயங்கும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கல்வித்துறையில் முறையிட்டனர்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கல்வித்துறை செயலர் ஜவகரும் உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் பள்ளிகள் இயங்கும் நேரம் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அனுப்பியுள்ள உத்தரவில்,
பள்ளிகள் இயங்கும் நேரம் கல்வித்துறை செயலரின் ஒப்புதலோடு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட நேர அட்டவணைப்படி வருகிற 7 ம் தேதி முதல் பள்ளிகள் இயங்குமாறு அனைத்து பள்ளி தலைவர்களும் அறிவுறுத்தப்படுகிறது.

இந்த புதிய நேர அட்டவணை வருமாறு: காலை 9.15 மணி முதல் 9.30 மணி வரை காலை வழிபாடும், காலை 9.30 மணி முதல் 12.25 மணி வரை நான்கு பாடவேளையும், காலை 11 மணி முதல் 11.10 வரை சிறிய இடைவெளியும் விடப்படும். மதியம் 12.40 மணி முதல் 1.30 மணி வரை உணவு இடைவேளையும், மதியம் 1.30 மணி முதல் மாலை 4.20 மணி வரை 4 பாடவேளையும், மதியம் 2.50 மணி முதல் 3 மணி வரை சிறிய இடைவெளியும் விடப்படும். இதில் காலையில் உள்ள 4 பாடவேளைகள் தலா 45 நிமிடங்களும், மதியத்திற்கு பிறகு நடைபெறும் 4 பாடவேளைகள் தலா 40 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.