புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அரசு பள்ளி ஒன்றில் அனைத்து பாடங்களிலும் நூறு மதிப்பெண்ணும், நூறு சதவீத வருகை பதிவேடு பெற்ற 5-ம் வகுப்பு மாணவர்களை கௌரவிக்கும் வகையில் இருவரையும் ஒரு நாள் தலைமை ஆசிரியரகளாக பொறுப்பேற்க வைத்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.
புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ – மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் பூக்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். மேலும் முதல் நாளே பாடப் புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட விலையில்லா எழுத பொருட்களும் பள்ளியின் சார்பில் வழங்கப்பட்டது.
இதனிடையே புதுச்சேரி நகர பகுதியில் உள்ள எக்கோல் ஆங்கிலேஸ் தொடக்கப் பள்ளியில், உருளையன்பேட்டையை சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவன் ஹரிகரன் கடந்த ஆண்டு அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்றதற்காகவும், உப்பளம் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஜோஸ்வா 100 சதவீத வருகை பதிவேடு பெற்றதற்காக, இந்த இரண்டு மாணவர்கள் கௌரவிக்கும் வகையில், பள்ளி நிர்வாகம் சார்பில் இருவரையும் ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்க வைத்து பாராட்டப்பட்டது. பள்ளியின் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்ட மாணவர்கள் ஹரிஹரன் மற்றும் ஜோஸ்வாவிற்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இனிப்புகள் வழங்கி, சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற மாணவர்கள் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து ஒரு நாள் தலைமை ஆசிரியர்களாக பொறுப்பேற்றுள்ள மாணவர்கள் கூறும்போது, முதல் மதிப்பெண் எடுத்ததால் தன்னை ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பு கொடுத்து கௌரவப்படுத்திய ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இது என்னை போன்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.