புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெய்யிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனிடையே வெய்யில் தாக்கத்தால் பள்ளி மாணவர்கள் பாதிக்காமல் இருக்க கோடை விடுமுறையை மூன்கூட்டியே விட வேண்டுமென அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், புதுச்சேரியில் நாளை (28-04-2025) முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அதிகரித்து வரும் கடும் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் நாளை (28.04.2025) முதல் வரும் ஜூன் மாதம் (01.06.2025) ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் (02.06.2025) தேதி முதல் வழக்கம் போல் செயல்படும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே வரும் 30 ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெய்யில் தாக்கத்தால் தற்போது மூன்று நாட்களுக்கு முன்பே கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.