புதுச்சேரி சிறுமியை கர்நாடகாவுக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பேக்கரி கடை ஊழியருக்கு 20 ஆண்டுகள் சிறை.! எஸ்டேட்டில் தங்குவதற்கு இடமளித்த நண்பருக்கும் சிறை…

புதுச்சேரியில் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தவருக்கும், அவருக்கு தங்க வீடு அளித்தவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்தவர் ராஜேஷ் (25). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ராஜேஷ் கூறியுள்ளார். அதன்படி கர்நாடக மாநிலத்தில் எஸ்டேட் ஒன்றில் பணிபுரியும் தனது நண்பர் கதிர்வேலுவிடம் பேசி சிறுமியை கர்நாடக எஸ்டேட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தரப்பில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் போக்சோ பிரிவில்
வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் மற்றும் கர்நாடக மாநிலத்தில் அவருக்கு தங்க இடம் கொடுத்த கதிர்வேலு ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணையானது புதுச்சேரி போக்சோ சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் கடந்த 6 வருடங்களாக நடைபெற்றது. வழக்கின் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில், இன்று குற்றஞ்சாட்டப்பட்ட ராஜேஷ் மற்றும் அவருக்கு உதவிய கதிர்வேலு ஆகிய இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் வழங்கி நீதிபதி சுமதி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.