புதுச்சேரியில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிலை, பாஜகவின் செயல்திட்டங்கள் மற்றும் மாநில அரசியல் சூழ்நிலை குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன.
மத்திய தொழிலாளர் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், புதுச்சேரி பாஜக தேர்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா, ஒரு நாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்தார். பின்னர், நகரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பாஜகவின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
ஆலோசனை கூட்டம்:
அந்தக் கூட்டத்தில் பாஜக எம்.பி செல்வகணதி, மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மற்றும் பாஜக அமைச்சர் நமச்சிவாயம், சாய். ஜெ. சரவணன், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ராமலிங்கம், ரிச்சர்ட் ஜான்குமார், வெங்கடேசன், அசோக் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் ரங்கசாமியுடன் சந்திப்பு: பின்னர் மாண்டவியா, சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து பேசினார். அவருக்கு பூங்கொத்து மற்றும் நினைவுப் பரிசு வழங்கி முதல்வர் வரவேற்றார்.
அந்த சந்திப்பின் போது, மாநில அந்தஸ்து உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என முதல்வர் ஆதங்கம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு பதிலளித்த மாண்டவியா,
“நான் இப்போதுதான் வந்துள்ளேன். தொடர்ந்து வரப்போகிறேன். ஒவ்வொரு பிரச்சனையும் அமர்ந்து பேசி தீர்வுகாண்போம்,”
என உறுதி அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆட்சியை தொடர பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன. மாநில பாஜக தலைவர் நியமனம் மற்றும் தேர்தல் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.