புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்குமா? இந்தியா கூட்டணியிடம் உதவி கேட்ட முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டுமன பாஜக கூட்டணியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி சட்டபேரவையில் கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 2024- 2025ம் ஆண்டிற்கான 12,700 கோடிக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி வெள்ளியன்று தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து சட்டப்பேரவையின் 4ம் நாள் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு துவங்கியது. முதலில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசினர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் இரா. சிவா, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி பலமுறை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும், இதுவரை ஒன்றிய அரசு மாநில அந்தஸ்து வழங்கவில்லை, எனவே முதலமைச்சர் ரங்கசாமி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் டெல்லிக்கு அழைத்து சென்று ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்தித்து மாநில அந்தஸ்து குறித்து வலியுறுத்த வேண்டும் என பேசினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி,
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து முக்கியமானது. ஆளுநருக்கு மட்டுமே இங்கு அதிகாரம் உள்ளது. எந்த திட்டங்களை செயல்படுத்தினாலும் துணை ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டிய நிலை உள்ளது.
இதனால் திட்டங்களை செயல் படுத்துவதில் காலதாமதம் ஆகிறது.
மாநில வளர்ச்சிக்கு திட்டங்களை விரைவாக செயல்படுத்த தனி மாநில அந்தஸ்து வேண்டும் என்றவர், பலமுறை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் இதுவரை மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை.
இதனால் பல சிரமங்களுக்கு இடையே மக்களுக்கான நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என வேதனையுன் பேசினார். மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டுமென்றால் பாராளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி-க்களும் குரல் கொடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.