புதுச்சேரியில் சில அரசு துறைகளிலும் லஞ்சம் கொடுத்தால்தான் பணிகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அண்மையில் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகளை சிபிஐ கைது செய்தது.
இந்நிலையில் தற்போது புதுச்சேரி சாரம் பகுதி காமராஜர் சாலையில் அமைந்துள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் ஸ்ரீகாந்த். இவர் ஒரு பத்திரப்பதிவு செய்வதற்காக தனது அலுவலகத்தில் உள்ள கழிவறையில் லஞ்சம் பெற்றுக் கொண்டு, விரைந்து பத்திரத்தை பதிந்து கொடுப்பதாக பேசிக் கொண்டே வெளியே வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ லஞ்சம் கொடுத்தவர்கள் ரகசியமாக எடுத்து வெளியிட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும் சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் மீது வேறு சில பத்திரப்பதிவு செய்யும் போது லஞ்சம் பெற்றதாக புகார் உள்ள நிலையில், தற்போது இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.