புதுச்சேரி அரசின் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதியத்திற்கான வயதை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் இரண்டாவது நாளாக இன்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் வகுப்புகள் முழுவதும் பாதிக்கப்பட்டது. மேலும் பேராசிரியர்கள் போராட்டத்திற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் நேரில் சென்று ஆதரவு அளித்தார்.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள அரசின் தொழில்நுட்ப மாநில பல்கலைகழகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திற்கு நிர்வாக குழு அமைக்க வேண்டும், ஓய்வூதிய வயது உயர்வை அறிவிக்க வேண்டும், பொறுப்பு பதிவாளர் நியமன முறைகேட்டை விசாரிக்கை வேண்டும் தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் கடந்த 6 நாட்களாக மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், கருப்பு பட்டை அணிந்து மற்றும் உணவு இடைவேளையில் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் பேராசிரியர்களின் கோரிக்கைகளை அரசு இதுவரை நிறைவேற்றாத காரணத்தினால் நேற்று முதல் முதல் பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து தொழில்நுட்ப வளாகத்தில் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக பேராசிரியர்களின் போராட்டம் தொடர்ந்ததால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பேராசிரியர்களின் போராட்டத்திற்கு காலப்பட்டு தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து, பேராசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.