புதுச்சேரி திருக்கனூரை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக அறிமுகமில்லாத எண்ணிலிருந்து ஆபாச வீடியோ மற்றும் குறுஞ்செய்தி வந்ததையடுத்து, அப்பெண் புதுச்சேரி இணையவழி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இணையவழி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். மேலும் அந்த பெண்ணிற்கு ஆபாசமாக வீடியோ அனுப்பிய வாட்ஸ்அப் எண்ணின் இயக்கங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
தொடர் விசாரணையில், பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பியது முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த மதபோதகர் வேலு என்கிற இம்மானுவேல் என தெரியவந்தது. இதையடுத்து இம்மானுவேலுவை கைது செய்த போலீசார்,
அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்து விசாரணை செய்ததில், பெண்ணிற்கு ஆபாசமாக புகைப்படம் அனுப்பியது இம்மானுவேல் என்பதும், இதேபோல் சில பெண்களுக்கும் ஆபாச மெசேஜ்களும், வீடியோக்களும் அனுப்பியது தெரிவவந்தது. இதையடுத்து இம்மானுவேலுவை புதுவை தலைமையியல் குற்ற நீதிபதி சிவகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து இணையவழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைத்தானியா பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் விடுத்துள்ள வேண்டுகோளில், அறிமுகமில்லாத எண்ணிலிருந்து பெண்களுக்கு அச்சுறுத்தப்படுகின்ற மாதிரி ஏதேனும் ஆபாச புகைப்படங்கள் வந்தால் உடனடியாக 1930 எண்ணிற்கு புகார் செய்யுமாறும் அல்லது இணையவழி காவல் நிலையத்தில் புகார் அளித்தால் அப்படி புகார் கொடுக்கும் பட்சதில் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடந்த ஆண்டில் 45 புகார்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்குகள் பதியப்பட்டு அனைத்து வழக்குகளும் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இளைஞர்கள் ஆண்கள் குறிப்பாக இணைய வழியில் நடக்கின்ற குற்றங்களை போலீசார் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று யாரேனும் எளிதில் என்ன வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார். இதுபோன்ற தவறுகள் செய்பவர்களை இணைய வழி காவல் நிலையத்தில் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் மிக எளிமையாக குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சைபர் குற்றவாளிகளை எச்சரிக்கை செய்துள்ளார்.