புதுச்சேரியில் அங்கன்வாடி மையத்தில், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள், கர்ப்பிணிகளுக்கு ஒரு முட்டை வழங்கப்படுகிறது.முட்டைகளை உரிய நேரத்தில் வழங்காமல் காலம் கடந்து, இரண்டு, மூன்று வாரங்களுக்கு சேர்த்து ஒரே நேரத்தில் முட்டைகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கிருமாம்பாக்கம் இந்திரா நகர் அங்கன்வாடி மையத்தில் நேற்று குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு முட்டைகள் வழங்கப்பட்டது. அதில், தலா ஒருவருக்கு 10 முட்டைகள் வரை வழங்கப்பட்டது. முட்டைகளை வாங்கிச் சென்ற பெண்கள், வீட்டில் சமைப்பதற்காக உடைத்துள்ஹனர். அதில் மஞ்சல் கரு கருப்பு நிறமாக இருந்ததுடன், கடும் துர்நாற்றமும் வீசியது. முட்டை கெட்டு போய் இருப்பதை கண்டு, அதிர்ச்சியடைந்த பெண்கள், அங்கன்வாடி மையத்திற்கு சென்று பணியாளர்களிடம் கேட்டுள்ளனர். அவர்கள், எங்களுக்கு வந்த முட்டைகளை தான் வழங்கினோம். இது தொடர்பாக, உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், அழுகிய முட்டைகளை அங்கேயே வீசி விட்டு சென்றனர்.
இதனிடையே கடந்த வாரம் நடந்த புதுச்சேரி சட்டபை கூட்டத்தொடரில் கர்ப்பிணிகளுக்கு அங்கன்வாடி மையங்களின் மூலம் வாரத்திற்கு 6 முட்டைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.