நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 157 வது பிறந்த நாள்: நினைவிடத்தில் தமிழ் அமைப்பினர் மலர் தூவி மரியாதை

நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் 157 வது பிறந்த நாளையொட்டி தமிழ் அமைப்பினர் புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள அவரது நினவிடத்தில் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

தமிழ் நாடகத் தந்தை, தமிழ் நாடக மறுமலர்ச்சியாளர் என அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் நாடகத்தை தனது மூச்சாக கொண்டு 63 நாடகங்களை அரங்கேற்றியவர். எஸ்.ஜி.கிட்டப்பா, பி.கே.சண்முகம் சகோத ரர்கள், எம்.ஆர்.ராதா போன்ற முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் தனது இறுதி காலத்தை புதுச்சேரியில் கழித்த அவர், 1922-ம் ஆண்டு நவம்பர் 13-ம் நாள் மறைந்தார்.

இந்நிலையில் இன்று சங்கரதாஸ் சுவாமிகளின் 157 வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி கருவடிக்குப்பம் சுடுகாடு வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் இராதே அறக்கட்டளை சார்பில் தமிழ் அமைப்பினர், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர் மற்றும் நாடக கலைஞர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சங்கரதாஸ் சுவாமிகளின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென புதுச்சேரி அரசுக்கு தமிழ் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.