புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், மாணவர் பாதுகாப்பிற்காக வாகனங்களை ஆய்வு செய்த போது தனியார் கல்லூரி பேருந்தின் அவசரகால கதவு செயலிழந்தது.
புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுதினம் (02.06.2025) அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இந்த விடுமுறை நாட்களில் பள்ளி வாகனங்களை சீரமைக்கும் பணிகளில் கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டனர்.
இதற்கிடையே புதுச்சேரி போக்குவரத்து துறை அதிகாரிகள் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்கள் பயணம் செய்யும் கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாமை இன்றும் நாளையும் என இரண்டு நாட்கள் புதுச்சேரி மேட்டுப்பாளையம் கனரக முனையத்தில் நடத்தி வருகிறது.
புதுச்சேரி பகுதியில் இருந்து 1,100 பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் ஆய்வு செய்யப்பட உள்ளது. மாணவ, மாணவிகள் பயணம் செய்யும் வாகனங்கள் மஞ்சள் நிறத்தை கொடுத்து தனி அடையாளத்தைக் கொடுத்து மாணவர்கள் பாதுகாப்புடன் பயணிக்கிறார்கள் என்ற எச்சரிக்கையுடன் செல்ல வழிவகை செய்கிறது. வாகன ஆய்வாளர்கள், உதவி வாகன ஆய்வாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வாகனத்தின் தகுதி சான்றிதழ், காப்பீடு , பர்மிட், முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள், ஜன்னல்களில் கிடைமட்ட கிரில்கள், அவசர காலத்தில் வெளியேறும் கதவு, பேருந்தின் கதவுகள், உறுதியான பூட்டுக்கள், வேக கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஎஸ் கருவி, புகையில்லா சான்றிதழ், ஓட்டுனர் நடத்துனர்களுக்கு மாணவர்களுக்கு பாதுகாப்பிற்கும் மேற்கொள்ள வேண்டிய அவசியமான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் ஆய்வு செய்தனர்.
மேலும் மாணவியர் பேருந்துகளில், கண்டிப்பாக பெண் நடத்துனர் நியமிக்க வேண்டும், குழந்தைகளை வைத்து வாகனங்களை இயக்கும்பொழுது மிகவும் கவனமாக வாகனத்தை நிதானமாக இயக்க வேண்டும். பள்ளி – கல்லூரி வாகன ஓட்டுனரின் ஓட்டுனர் உரிமம் மற்றும் குற்ற பின்னணி சரிபார்த்த பின் நடத்துனருக்கு அடையாளம் அட்டை சீருடை வழங்கி பணியில் அமர்த்தப்பட வேண்டும் என போக்குவரத்து அதிகாரிகள் வலியுறுத்தினர். பள்ளி கல்லூரி வாகனங்களில் ஓட்டுனர்களுக்கு தீயணைப்பு துறை மூலமாக, தீ அணைக்கும் கருவியை பயன்படுத்துவதற்கான செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
இந்த முகாமில் தகுதியுள்ள வாகனங்கள் சான்றிதழ் அளித்து வாகனங்களின் முகப்பில் ஒட்டப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறும் பள்ளி வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே ஆய்வின்போது தனியார் கல்லூரி பேருந்து ஒன்றில் அனைத்து ஆய்வுகளும் நிறைவடைந்து, போக்குவரத்துத் துறையால் வாகனத்தின் முகப்பில் நிறைவடைந்ததற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அப்போது ஆய்வு செய்யப்பட்ட வாகனத்தின் அருகில் நின்று மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையரை பத்திரிகை நிருபர்கள் புகைப்படம் எடுப்பதற்கு ஏற்பாடு செய்தபோது, ஆணையர் பேருந்தின் அவசரகால வழி கதவின் அருகில் நின்று அவசர கால கதவைத் திறக்குமாறு சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி வாகன ஓட்டுனரிடம் கூறினார். ஓட்டுனரும் கதவைத் திறக்க முயற்சி செய்தபோது கதவை திறக்க முடியவில்லை. கடுமையாக போராடி கதவைத் திறக்க முயற்சி செய்தபோது கைப்பிடி மட்டுமே உடைத்துக்கொண்டு கையில் வந்தது. கடைசி வரை கதவை திறக்கவே முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் வேறொரு வாகனத்தின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள மாவட்ட ஆட்சியரை அழைத்துச் சென்றனர்.