புதுச்சேரியில் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்ம அடி கொடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் கண்ணாடி, மேஜை உள்ளிட்ட பொருட்களை உடைத்து பள்ளியை சூறையாடினர். மேலும் ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள் புதுச்சேரி – கடலூர் சாலையில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி மணவெளி தொகுதிகுட்பட்ட தவளக்குப்பம் தானாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நோனாங்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன். இவர் அதே பள்ளியில் 1 ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியிடம் கடந்த 4 மாதங்களாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் அந்த சிறுமிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது சிறுமி பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, தன்னிடம் ஆசிரியர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று இதுகுறித்து கேட்டபோது, பள்ளி நிர்வாகம் தரப்பில் சரியான பதில் கூறவில்லை என தெரிகிறது. இதனால் பள்ளியில் இருந்த கண்ணாடி, மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை உடைத்து பள்ளியை சூறையாடினர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக தவளகுப்பம் காவல் நிலையத்தில் புகரா் கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறையும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், தாமதப்படுத்தியுள்ளதாத கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு, பள்ளியை சூறையாடி ஆசிரியர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து, கைது செய்யக்கோரி புதுச்சேரி – கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி – கடலூர் சாலையில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மணிகண்டனை விசாரணைக்காக பள்ளியில் இருந்து போலீசார் காவல்நிலையம் அழைத்து செல்ல முயன்றபோது, ஆசிரியரை பொதுமக்களும், உறவினர்களும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.