பள்ளி கோடை விடுமுறையில் மூணாறுக்கு சுற்றுலா சென்ற புதுச்சேரி மாணவி திடீரென உயிரிழப்பு.!

புதுச்சேரி தவளைக்குப்பம் தானம்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ பரிமளம் தம்பதியின் மகள் பரிவதவர்த்தினி (வயது 15). மகன் விஷ்வா உள்பட குடும்பத்தினர் 8 பேர் கொண்ட குழுவினர் மூணாறுக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் மூணாறு காலனி செல்லும்
சாலையில் தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். இரவு நேரத்தில் அங்குள்ள ஒரு ஓட்டலில் அவர்கள் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர். அப்போது நள்ளிரவு 11.30 மணியளவில் பரிவதவர்த்தினிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆனால் பெற்றோர் இதனை பெரிதுபடுத்தாமல் தைலம் தடவிவிட்டு தூங்கி விட்டனர்.

காலையில் எழுந்து பார்த்தபோது பரிவதவர்த்தினி பேச்சு மூச்சற்ற நிலையில் இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இறந்த பரிவதவர்த்தினி புதுவை தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு எழுதிவிட்டு விடுமுறைக்காக தனது குடும்பத்துடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தபோது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மூணாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.