மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ராகு – கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

நவ கிரகங்களில் ஒன்றான ராகு பகவான் நேற்று மாலை 4:20 மணிக்கு மீனம் ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடம் பெயர்ந்தனர். இதனையொட்டி புதுச்சேரி அருகில் மொரட்டாண்டியில் அமைந்துள்ள சனீஸ்வரர் கோவில் வளாகத்தில், 12 அடி உயர ராகு மற்றும் கேது பகவான்களுக்கு சிதம்பர கீதாராம் குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது.

முன்னதாக காலை 11:00 மணிக்கு நட்சத்திர ராசி பரிகார ஹோமம் மற்றும் மகா பூர்ணாஹூதி நடந்தது. பகல் 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. மாலை 4:20 மணிக்கு ராகு மற்றும் கேது பகவான்களுக்கு பஞ்சலோக ஆபரண கவசம் சாற்றி, மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பரிகார பூஜை செய்து, வழிபட்டனர்.