டூவீலரில் கடத்திச்சென்று சித்ரவதை செய்து கொலை செய்தோம்.!! புதுச்சேரியில் ரவுடி தெஸ்தானின் மகன் உள்ளிட்ட மூன்று வாலிபர்கள் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம்…

புதுச்சேரியில் மூன்று வாலிபர்களை கொலை செய்த வழக்கில் பிரபல ரவுடி சத்யா, ஒரு சிறார் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ரவுடி சத்யாவை கொலைசெய்ய வாலிபர்கள் நோட்டமிட்டதால், அவர்களை கத்தி முனையில் இருசக்கர வாகனத்தில் கடத்திச்சென்று சத்யா தனது சொந்த இடத்தில் வைத்து சித்ரவதை செய்து வாலிபர்களை வெட்டி படுகொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 14 ஆம் தேதி புதுச்சேரி நகரின் மையப் பகுதியான ரெயின்போ நகர் ஏழாவது குறுக்கு தெருவில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில், இரண்டு வாலிபர்கள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டும், மற்றொரு வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரியகடை காவல்நிலைய போலீசார், அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த இரண்டு வாலிபர்களின் உடலை மீட்டு, வெட்டு காயங்களுடன் இருந்த மற்றொரு வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனை அழைத்து சென்ற நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நகரின் மையப்பகுதியில் நடைபெற்ற இக்கொலை சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசாரின் விசாரணையில், கொலையுண்ட மூன்று பேரில் ஒருவர் மறைந்த பிரபல தாதா தெஸ்தானின் மகன் ரஸி என்பதும், மற்றொருவர் திடீர் நகரை சேர்ந்த தேவா என்பதும், மற்றொருவர் ஜெ.ஜெ நகரைச் சேர்ந்த ஆதி என்பதும் தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெரியகடை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூன்று தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதில் முதற்கட்டமாக, கொலை நடந்திருப்பது பிரபல ரவுடி சத்தியாவின் இடத்தில் என தெரியவர, போலீசாரின் விசாரணை வலையம் சத்யா பக்கம் திரும்பியது. அப்போது சத்தியாவின் கூட்டாளிகளான ரோடியார்பேட் பகுதியை சேர்ந்த சக்திவேல் மற்றும் சரணை பிடித்து விசாரணை செய்ததில், மூன்று வாலிபர்களை கொலை செய்தது ரவுடி சத்யா கும்பல்தான் என்பதை போலீசார் உறுதிசெய்தனர்.

இதனையடுத்து சென்னை கோயம்பேடு பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி சத்யாவை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை செய்ததில், முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி விக்கிக்கும், சத்யாவிற்கும் முன்விரோதம் இருந்து வந்ததும், இதில் யார் யாரை முதலில் கொலை செய்வது என்ற போட்டி இருவருக்குள்ளும் இருந்து வந்த நிலையில், விக்கி தன்னுடைய கூட்டாளிகளான ரஸி, தேவா, ஆதி ஆகிய மூன்று வாலிபர்களை வைத்து சத்யாவை கொலை செய்ய நோட்டமிட்டதாகவும், இதில் கடந்த 13 ஆம் தேதி இரவு சத்யா தனது மனைவியுடன் கடற்கரை சாலைக்கு சென்றபோது, அவரை மூன்று வாலிபர்களும் பின் தொடர்ந்ததாகவும், இதனை கண்ட சத்யா தனது கூட்டாளிகள் 10 பேரை வரவழைத்து ரஸி, தேவா, ஆதி ஆகிய மூவரையும் கத்தி முனையில் இருசக்கர வாகனங்களில் கடத்திச்சென்று, ரெயின்போ நகரில் உள்ள ரவுடி சத்யாவின் பாழடைந்த வீட்டு அருகில் இருந்த காலி மனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் மூவரையும் அடித்து சித்ரவதை செய்து, பின்னர் அவர்களை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து இவ்வழக்கில் சத்யாவின் கூட்டாளிகலான சக்திவேல், சரண், சஞ்சீவி, ரவிந்தரகுமார், காமேஷ், சாரதி, விஷ்ணு, வெங்கடேசன், மற்றும் ஒரு சிறார் உட்பட 10 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய தடி, கத்தி மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, 10 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தி, 9 பேரை காலாப்பட்டு மத்திய சிறையிலும், சிறாரை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். தொடர்ந்து இக்கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சத்யாவின் அண்ணன் சங்கர், அவரது கூட்டாளிகள் ஆபிரகாம், விஷ்ணு மற்றும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் ரவுடி சத்யா மற்றும் அவரது அண்ணன் சங்கர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் புதுச்சேரி தமிழகத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.