எளிமையான, ஊழலற்ற, விளையாட்டை விரும்பக்கூடிய முதலமைச்சரை புதுச்சேரி பெற்றுள்ளதாகவும், உங்களுடன் (முதலமைச்சர் ரங்கசாமியுடன்) இணைந்து பயணிக்க தயாராக உள்ளோம் என புதுச்சேரி முதமைச்சர் ரங்கசாமி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் தவெகவின் அரசியல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் பேசியுள்ளது அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.
அகில இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு சார்பில் 40வது இளையோர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி ராஜீவ் காந்தி உள் விளையாட்டு அரங்கில் துவங்கியது. துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அகில இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவரும், தமிழக வெற்றிக்கழக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தனர். இதில் பேசிய ஆதவ் அர்ஜுனா, எளிமையான, ஊழலற்ற, விளையாட்டை விரும்ப கூடிய முதலமைச்சரை புதுச்சேரி பெற்றுள்ளதாகவும், புதுச்சேரி முதலமைச்சர் தற்போது கூட காலை மாலை இரு வேளைகளிலும் டென்னிஸ் விளையாடி வருவாதகவும், விளையாட்டு வீரர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியாக உள்ளதாக தெரிவித்த அவர், உங்களுடன் பயணிக்க நாங்கள் தயாராக உள்ளதாக சூசகமாக தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் புதுச்சேரியை சேர்ந்தவர் என்பதும், அவர் புதுச்சேரி முதலமைச்சருக்கு நெருக்கமானவர் என்பது மட்டுமில்லாமல், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடந்த மாதம் நடைபெற்ற தனது கட்சியின் ஆண்டு விழாவில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது உங்களுடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ளோம் என தமிழக வெற்றி கழகத்தின் ஆதவ் ஆர்ஜூன் பேசியுள்ளது அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.