துணை ஜனாதிபதி செல்வதற்காக நீண்ட சாலையில் தடுத்து நிறுத்தப்பட்ட மாணவர்கள்… பெற்றோர்கள் ஆவேசம்

புதுச்சேரியில் துணை குடியரசு தலைவர் செல்லும் சாலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெற்றோர்கள் ஆவேசமடைந்தனர்.

இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை புதுச்சேரிக்கு வருகை தந்த, இந்திய துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் புதுவை பல்கலைகழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்பு கடற்கரை சாலையில் உள்ள நீதிபதி மாளிகையில் தங்கினார்.

இன்று காலை அவர் லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் செல்ல நீதிபதி மாளிகையில் கிளம்பியபோது , பாதுகாப்பு கருதி அவர் செல்லும் வழியில் உள்ள இணைப்பு சாலைகள் 30 நிமிடத்திற்கு முன்பாகவே மூடப்பட்டது. அந்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் வந்து சாலையில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. புதுச்சேரி கடற்கரை சாலையில் இவ்வாறு காத்திருந்த பெற்றோர்கள் பொறுமை இழந்து காவலில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.