புதுச்சேரியில் ரூ 5.10 கோடி வாட்ஸ்அப் மோசடி: மேலும் 4 பேர் கைது – வெளிநாட்டு தொடர்பு குறித்து விசாரணை

புதுச்சேரியில் தனியார் நிறுவன உரிமையாளரைப் போன்று, அந்நிறுவனத்தின் கணக்காளரிடம் வாட்ஸ்அப்பில் பேசி, நூதன‌ முறையில் ரூபாய் 5.10 கோடி மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இதில் மேலும் தொடர்புடைய ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவைச் சேர்ந்த 4 பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து. மேலும் இந்த வெளிநாட்டை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதால், அதுகுறித்தும் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பொதுமக்கள் தங்களது வங்கி கணக்குகள் மற்றும் தொலைபேசி எண்களை மற்றவர்களுக்கு கமிஷனுக்காக கொடுத்து உதவுவதை தவிர்க்க வேண்டும் எனவும், அப்படி கொடுக்கும்போது ஏதேனும் சைபர் குற்றச்சம்பவங்கள் நடைபெற்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் தனியார் நிறுனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருபவர் சுகியா. இவருக்கு அவர் பணபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் புகைப்படத்துடன் கூடிய வாட்ஸ்அப் கால் வந்தது. அதில் உரிமையாளர் போல் பேசிய‌ நபர், தான் தொடங்க உள்ள புதிய திட்டத்திற்கு பணம் தேவைப்படுவதால், குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய சுகியா இணைய வழி மோசடிக்காரர்களின் வங்கி கணக்குகளில் பல தவணைகளாக ரூபாய் 5.10 கோடி ரூபாயை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் உரிமையாளர் போனில் பேசியபோது, சுகியா பணம் அனுப்பிய விபரத்தை கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர், பணம் அனுப்பிய வங்கி கணக்குகள், வாட்ஸ்அப் கால்களை ஆய்வு செய்ததில், அவரது புகைப்படத்தை வைத்து மர்ம நபர்கள் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சைபர் குற்றவாளிகள் மோசடி செய்து பெற்ற ரூ.5.10 கோடியில், ரூபாய் 3 கோடி மேற்கு வங்கம், முர்ஷிதாபாத் வங்கி கிளைக்கு மாற்றப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த வங்கி கணக்கின் உரிமையாளரான
மேற்கு வங்க மாநிலம், முஷராபாத் மாவட்டத்தை சேர்ந்த மொபிகுல் ஆலம் மற்றும் அவரது கூட்டாளியான நஸீபுல் இஸ்லாம்(34) ஆகியோரை கைது செய்தனர். மேலும்
இவ்வழக்கில், மற்றொரு வங்கி கணக்கில் ரூ.1.80 கோடி பணம் செலுத்தப்பட்டிருந்த நிலையில், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த சரத் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இதுவரை 7 பேரை புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், ரூபாய் 2 கோடி 48 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை புதுச்சேரி போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த ஓம்கார்நாத் என்பவரை கர்நாடகாவில் சுற்றி வளைத்த சைபர் கிரைம் போலீசார் அவர் உட்பட தெலுங்கானாவை சேர்ந்த ராகவேந்திரா மற்றும் ஆந்திர பிரதேசத்தைச் சார்ந்த சசிதர்நாயக் மற்றும் பவாஜன் உட்பட நான்கு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து வங்கி கணக்குகளை பயன்படுத்தி பணம் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள், இன்டர்நெட் கனெக்ஷன்கள் மற்றும் ஒரு கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களை புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை செய்ததில், இந்த வழக்கில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து, அவர்களின் தகவல்களை திரட்டி கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் கூறுகையில், பொதுமக்கள்
வங்கி கணக்குகள் மற்றும் தொலைபேசி எண்களை மற்றவர்களுக்கு கமிஷனுக்காக கொடுத்து உதவுவதை தவிர்க்க வேண்டும். இது ஒரு குற்றமாகும். மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட பணம் உங்கள் கணக்கில் வந்தால், நீங்கள் சட்டப்படி பொறுப்பு ஏற்க வேண்டிய நிலைக்கு வருவீர்கள்‌ என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த ஆண்டில் மட்டும், வங்கி கணக்குகளை வேறு நபர்களுக்காக பயன்படுத்தி மோசடியை எளிதாக்க உதவிய குற்றத்திற்காக 10 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இணையவழி மோசடிகளுக்கு உள்ளாகியிருந்தால் அல்லது சந்தேகம் இருந்தால், உடனடியாக இலவச தொலைபேசி எண் 1930, சைபர் க்ரைம் இணையதளம் cybercrime.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் 0413-2276144 / 9489205246 ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம் என சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.