புதுச்சேரி முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி துவங்கியது: 200 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்

புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்று வரும் மாநில அளவிலான கபடி போட்டியில் 200 க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

புதுச்சேரி அரசு, புதுச்சேரி சமூதாய கல்லூரி மற்றும் புதுச்சேரி கபடி சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மாநில அளவிலான கபடி போட்டி உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று துவங்கியது. இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் நடைபெறும் போட்டியை திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி மற்றும் புதுவை மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு ஆகியோர் துவக்கி வைத்து, விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இப்போட்டியில் புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 20 அணிகளில் இருந்து, சுமார் 200 க்கும் மேற்பட்ட வீரர்‌, வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இதில் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சமுதாய‌ கல்லூரி முதல்வர் லலிதா செய்திருந்தார்.