புதுச்சேரி போலி மதுபான தொழிற்சாலை விவகாரம்: அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மீது சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்!

கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் உளவாய்க்கால் சந்திரசேகரன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம், இஸ்லாமியர்களுக்கு 2.5 சதவீத இட ஒதுக்கீடு பெறவும், எம்பிசி பிரிவினருக்கான உரிமைகள் கிடைக்கவும் இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் இதுவரை 3.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளதாகவும், இயற்கையை பாதுகாக்கும் பணியில் இயக்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

சிபிஐ வழிகாட்டுதலின் கீழ் அரசின் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிக்கொண்டு, அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்து பலருக்கு தண்டனை பெற்று தந்துள்ளோம். முதியோர் பென்ஷன் திட்டத்தில் 30-40 வயது நிரம்பிய போலி பயனாளர்கள் இருப்பது சிபிஐ மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, 18,000 போலி பயனாளர்கள் நீக்கப்பட்டதாகவும், குடிசை மாற்று வாரிய ஊழல் குறித்து புகாரளித்து 21 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் சந்திரசேகரன் தெரிவித்தார்.

இந்நிலையில், புதுச்சேரி வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பதவியை தவறாக பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான பழமையான மரங்களை வெட்டிவருவதாகவும், சுற்றுச்சூழல் அழிவிற்கு காரணமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. வனத்துறை அதிகாரிகள் கூட இவரின் ஊழல் நடவடிக்கைகளில் உடன் செயல்படுவதாகவும் கூறினார்.

மேலும், ஊசுடு ஏரி, சங்கராபரணி ஆறு, வேல்ராம்பட்டு ஏரி போன்ற முக்கிய நீர்நிலைகளில் மண் திருட்டு, ரூ.10,000 கோடி மதிப்புள்ள நிலங்களின் ஆக்கிரமிப்பு, சந்தன கட்டை மற்றும் போலி மதுபான தொழிற்சாலை போன்ற பல குற்றச்சாட்டுகள் அமைச்சர் மீது உள்ளன. இதனால், அமைச்சர் மீது சிபிஐ விசாரணை நடத்தி, அவரைபதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்துவதாக கூறினார்.