“வேலை செய்யாத ஊழியர்களால் கூட்டுறவு நிறுவனங்கள் அழிகின்றன” – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி எச்சரிக்கை

புதுச்சேரி குருமாம்பேட்டில், பாண்லே நிறுவனத்தில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் புதிய 20,000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி கூடம் அமைக்கும் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்று பணியைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

“பாண்லே பால் இருக்கா?” என்று மக்கள் கேட்பதற்கே அந்த நிறுவனத்தின் வைத்துள்ள மதிப்பு புரிகிறது. ஆனாலும் தற்போது ஊழியர்களின் அலட்சியத்தால் அது நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளது. பாதி பேர் மட்டும் வேலை செய்கிறார்கள்; மற்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை,” என்றார் அவர்.

ஊழியர்கள் வேலை செய்யாததால் பல கூட்டுறவு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என்றும், “லாபத்தில் இயங்கும்போதுதான் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் கிடைக்கும்” என்று அவர் வலியுறுத்தினார். இதனை உணர்ந்து ஊழியர்கள் முழுமையாக பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதை குறை கூறுவதற்குப் பதிலாக, “கறவை மாடுகள் வாங்கி பால் உற்பத்தி செய்து வருமானம் ஈட்டுங்கள்” எனக் கேட்டுக் கொண்டார். அரசு மற்றும் வங்கிகள் உதவி செய்யத் தயாராக உள்ளன என்றும், அதனை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

பாண்லே நிறுவனம் தற்போது குஜராத் கூட்டுறவு நிறுவனத்துடன் இணைந்து அமுல் பிராண்ட் ஐஸ்கிரீம்கள் உற்பத்தி செய்து தினசரி 10,000 லிட்டர் அளவில் விநியோகித்து வருகிறது. இந்த உற்பத்தியை 20,000 லிட்டராக உயர்த்தும் நோக்கில் புதிய உற்பத்தி கூடம் அமைக்கப்படுகிறது.

விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன் குமார், தேசிய பால்வள வாரியத் தலைவர் மீனேஷ் ஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.