புதுச்சேரியில் யோகா நாள் விழாவிற்காக நகரில் அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு, இந்தி மொழி மட்டுமே இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னோட்ட நிகழ்ச்சி மே 27ஆம் தேதி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெற உள்ளது, இதற்காக நகரம் முழுவதும் பதாகைகள் மற்றும் விளம்பர பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் அந்த பதாகைகளில் அனைத்து அறிவிப்புகளும் இந்தியில் மட்டுமே இடம்பெற்றுள்ளன என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் முழுமையாக புறக்கணிப்பட்டிருப்பது தமிழ் பேசும் புதுச்சேரி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கெதிராக தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் குரல் கொடுத்துள்ளனர். “தமிழ் புதுச்சேரியின் மூலமொழி. இதை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முடியாது. இது மொழி மீதான அவமதிப்பு” என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழில் பதாகைகள் ஏன் இல்லை? இதற்கு யார் பொறுப்பு? என்பதற்கான விளக்கங்களை அரசு விளக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.